டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் இருந்து சீன நிறுவனம் நீக்கம் ஒலிம்பிக் சங்கம் அதிரடி நடவடிக்கை


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் இருந்து சீன நிறுவனம் நீக்கம் ஒலிம்பிக் சங்கம் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2021 2:59 AM GMT (Updated: 10 Jun 2021 2:59 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் இருந்து சீன நிறுவனத்தை நீக்கி இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி, 

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கான சீருடை அறிமுக விழா கடந்த வாரம் டெல்லியில் நடந்தது. இந்திய அணிக்குரிய சீருடை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை (கிட்ஸ்) சீனாவைச் சேர்ந்த லி நிங் என்ற விளையாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ ஸ்பான்சர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அளித்து இருந்தது.

இந்தியாவுக்கு எல்லை பிரச்சினை மூலம் குடைச்சல் கொடுத்து வரும் சீன நாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஸ்பான்சர் ஒப்பந்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பின. இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் ‘கிட்ஸ்’ ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் இருந்து லி நிங் நிறுவனத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று முன்தினம் அதிரடியாக கழற்றி விட்டது.

இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா கூறுகையில் ‘சீன நிறுவனம் ஸ்பான்சரில் இருந்து நீக்கப்பட்ட விஷயத்தில் யாருடைய பெயரையும் இழுக்க விரும்பவில்லை. மீடியாக்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் இருந்து வந்த விமர்சனத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சர் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கான காலம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஸ்பான்சருக்காக யாருக்கும் நெருக்கடி கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. ஸ்பான்சர் ஒப்பந்தம் பரஸ்பர சம்மதம் கொண்டதாக இருக்க வேண்டும். இந்திய அணியினரின் சீருடையில் ஸ்பான்சர் பெயர் இடம் பெறுமா? அல்லது ஸ்பான்சர் பெயர் இல்லாமல் இருக்குமா? என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும். சீருடைகள் தயாராக இருக்கிறது.

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இந்தியா உள்பட 10 நாடுகளுக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்று வெளியாகி இருக்கும் செய்தி யூகத்தின் அடிப்படையிலானதாகும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இருந்தோ? அல்லது போட்டி அமைப்பு குழுவிடம் இருந்தோ எங்களுக்கு அப்படி எந்த தகவலும் வரவில்லை. ஆனாலும் இந்த விஷயத்தில் தெளிவான நிலையை தெரிவிக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் போட்டி அமைப்பாளர்களை நாங்கள் கேட்டு இருக்கிறோம். கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தில் மற்ற பல நாடுகளை விட இந்தியா நல்ல நிலையில் தான் இருக்கிறது.’ என்றார்.

இதற்கிடையே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் அங்கம் வகிப்பவர்களின் சீருடையில் எந்தவொரு ஸ்பான்சர் நிறுவனத்தின் பெயரும் இடம் பெறாது. சீருடையில் இந்தியா என்று மட்டுமே பொறிக்கப்பட்டு இருக்கும் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று டுவிட்டரில் அறிவித்தார்.

Next Story