ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் வெளியேற்றம்: மன்னிப்பு கேட்ட தமிழக வீராங்கனை


ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் வெளியேற்றம்: மன்னிப்பு கேட்ட தமிழக வீராங்கனை
x
தினத்தந்தி 26 July 2021 11:06 AM GMT (Updated: 26 July 2021 11:06 AM GMT)

ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் வெளியேறிய தமிழக வீராங்கனை மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று வாள்வீச்சு விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். அவர் தனது முதல் சுற்றில் துனிசியா நாட்டின் வீராங்கனை நடியா பென் அஜிசியை 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம், இரண்டாவது சுற்றான டேபிள் 32 சுற்றுக்கு முன்னேறினார்.

டேபிள் 32 சுற்றில் அவர் பிரான்ஸ் நாட்டு வீராங்கனை மனோன் பெர்னெட்டை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே பெர்னெட் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 7-15 என்ற புள்ளிகள் கணக்கில் பெர்னெட் வெற்றிபெற்றார். 7 புள்ளிகளை பெற்ற பவானிதேவி தோல்வியடைந்தார். இதனால், பவானிதேவி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை
இழந்தார்.

இந்நிலையில் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தமிழக வீராங்கனை பவானி தேவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இது மிகப் பெரிய நாள் உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். ஒலிம்பிக் வாள்வீச்சு முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் வென்றேன். இதன் மூலம் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் வென்ற முதல் இந்தியா வீராங்கனையானேன். எனது இரண்டாவது போட்டியில், வாள்வீச்சு போட்டியில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தேன். நான் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எல்லா முடிவுகளுக்கு ஒரு ஆரம்பம் இருக்கிறது. நான் தொடர்ந்து பயிற்சி எடுத்து பிரான்ஸில் நடக்கும் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன். அடுத்த ஒலிம்பிக்கில் கூடுதல் வலிமையுடன் வருவேன். எனது பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், இந்திய மற்றும் தமிழக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story