‘தங்கப்பதக்கத்துடன் வருவார்’ -லவ்லினா தந்தை நெகிழ்ச்சி
‘மகன்கள் தான் குடும்ப பொறுப்பை சுமப்பார்கள் என்று பலரும் சொல்வார்கள். ஆனால் நான் எனது 3 மகள்களை நினைத்து ஒரு தந்தையாக பெருமிதம் கொள்கிறேன்.
அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாராமுகியா என்ற கிராமத்தை சேர்ந்த லவ்லினாவின் தந்தை டிகென் போர்கோஹைன் உணர்ச்சி மிகுதியால் மகளின் ஆட்டத்தை டெலிவிஷனில் பார்ப்பதை தவிர்த்தார். பின்னர் அவரது வெற்றியை அறிந்ததும் மகிழ்ச்சியால் திளைத்த டிகென் கூறுகையில், ‘மகன்கள் தான் குடும்ப பொறுப்பை சுமப்பார்கள் என்று பலரும் சொல்வார்கள். ஆனால் நான் எனது 3 மகள்களை நினைத்து ஒரு தந்தையாக பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் பசங்களை விட எந்தவகையிலும் குறைந்தவர்கள் கிடையாது. எனது மனைவி சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட போது லவ்லினா மிகவும் கவலைப்பட்டார். அவர் பல இரவுகள் தூங்காமல் அருகில் இருந்து கவனித்தார். லவ்லினா தான் எங்கள் குடும்பத்தின் முதுகெலும்பு. எனது மனைவிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்த பிறகு மறுவாழ்வு கிடைத்துள்ளது. லல்வினா பெற்று இருக்கும் இந்த பதக்கம் எனது மனைவிக்கு எதிர்பார்த்ததை விட விரைவாக நலம்பெற உதவிகரமாக இருக்கும். எங்களது ஒட்டுமொத்த அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசு இதுவாகும். பொருளாதார பிரச்சினையால் எங்களது மகளின் கனவு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அவரது விளையாட்டு தேவைக்காக நாங்கள் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி செலவிட்டோம். கால்இறுதியில் வெற்றி பெற்ற பிறகு லவ்லினா என்னுடன் பேசினார். ‘கவலைப்படாதீங்க அப்பா.....தங்கப்பதக்கத்துடன் வருவேன்’ என்று சொன்னார். இதனை அவரால் செய்ய முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.
Related Tags :
Next Story