இந்திய கோல்ப் வீராங்கனை அதிதி அசோக்குக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு 2-வது இடத்தில் நீடிக்கிறார்


இந்திய கோல்ப் வீராங்கனை அதிதி அசோக்குக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு 2-வது இடத்தில் நீடிக்கிறார்
x
தினத்தந்தி 7 Aug 2021 2:25 AM GMT (Updated: 7 Aug 2021 2:25 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் கோல்ப் விளையாட்டில் பங்கேற்றுள்ள இந்திய வீராங்கனை அதிதி அசோக்குக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

கோல்ப் பெண்கள் தனிநபரில் மொத்தம் 4 சுற்றுகள் நடைபெறும். இதில் 3-வது சுற்று நிறைவில் அதிதி அசோக் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். அமெரிக்காவின் நெல்லி கோர்டா (198 புள்ளி) முதலிடம் வகிக்கிறார். 203 புள்ளிகளுடன் 4 வீராங்கனைகள் 3-வது இடத்தில் உள்ளனர். மற்றொரு இந்திய வீராங்கனை தீக்‌ஷா தாகர் 220 புள்ளிகளுடன் 51-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

கோல்ப் விளையாட்டை பொறுத்தவரை குறைவான புள்ளிகள் எடுப்பவரே வெற்றியாளர் ஆவார். புல்வெளி மைதானத்தில் நீண்ட தூரத்தில் இருந்து பந்தை அடிக்கும் போது ஒரே ஷாட்டில் பந்து இலக்குக்குரிய குழியில் விழுந்து விட்டால் குறைவான புள்ளி வழங்கப்படும். பந்தை குழியில் செலுத்துவதற்கு அதிகமான ஷாட் எடுத்துக் கொண்டால் அதிக புள்ளி கிடைக்கும். இதன்அடிப்படையில் புள்ளி முறை கணக்கிடப்படுகிறது.

இன்று காலை 4-வது சுற்று போட்டி நடக்கிறது. இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை மழையால் கடைசி ரவுண்ட் கைவிடப்படும் நிலை ஏற்பட்டால், தற்போது 2-வது இடத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்த 23 வயதான அதிதி அசோக்குக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்கும். ஒலிம்பிக் கோல்ப்பில் இந்தியர்கள் யாரும் இதுவரை பதக்கம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story