புரோ கபடி லீக்கில் 59 வீரர்கள் தக்கவைப்பு; அஜய் தாக்குரை கழற்றிவிட்டது தமிழ் தலைவாஸ்


புரோ கபடி லீக்கில் 59 வீரர்கள் தக்கவைப்பு; அஜய் தாக்குரை கழற்றிவிட்டது தமிழ் தலைவாஸ்
x
தினத்தந்தி 21 Aug 2021 6:13 AM GMT (Updated: 21 Aug 2021 6:13 AM GMT)

புரோ கபடி லீக்கில் மொத்தம் 59 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். தமிழ் தலைவாஸ் அணியில் கேப்டன் அஜய் தாக்குர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புரோ கபடி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சீசனுக்கான புரோ கபடி லீக் ரத்து செய்யப்பட்ட நிலையில் 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனுக்கான ஒவ்வொரு அணியிலும் தக்கவைக்கப்பட்டு இருக்கும் வீரர்கள் விவரத்தை போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்தனர். பர்தீப் நார்வால் (பாட்னா பைரட்ஸ்), சுகேஷ் ஹெக்டே, ஜீவகுமார் (பெங்கால் வாரியர்ஸ்), சித்தார்த் தேசாய் (தெலுங்கு டைட்டன்ஸ்), சந்தீப் நார்வால் (மும்பை), ரோகித் குமார் (பெங்களூரு), சேரலாதன் (அரியானா) உள்பட 161 வீரர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். மொத்தம் 59 வீரர்கள் தங்களுடைய அணிகளால் தக்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன்படி உயர்மட்ட (எலைட்) வீரர்கள் பிரிவில் 22 பேரும், இளம் வீரர்கள் பிரிவில் 6 பேரும், புதிய இளம் வீரர்கள் பிரிவில் 31 பேரும் தங்களது அணியில் தொடர்ந்து நீடிக்கிறார்கள். கடந்த 2 சீசனில் இடம் பிடித்த வீரர்கள் உள்பட தக்கவைக்கபடாத வீரர்களுக்கான ஏலம் மும்பையில் வருகிற 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஏலத்தில் ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் வீரர்களின் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.4.4 கோடி செலவு செய்யலாம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்கள் இடம் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது.

அஜய் தாக்குர்
நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ் அணி கேப்டன் மனிந்தர் சிங், நட்சத்திர வீரர் முகமது இஸ்மாயில், ரிங்கு நார்வாலையும், பெங்களூரு புல்ஸ் அணி கடந்த சீசனில் அதிக புள்ளிகள் குவித்த பவன்குமார் ஷெராவத்தையும், தபாங் டெல்லி அணி நவீன் குமார், நீரஜ் நார்வாலையும், மும்பை அணி அனுபவம் வாய்ந்த பாசெல் அட்ராசாலியையும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணி பர்வேஷ் பன்ஸ்வால், சுனில்குமாரையும், அரியானா ஸ்டீலர்ஸ் அணி விகாஷ் கன்டோலாவையும், உ.பி.யோத்தா அணி நிதிஷ்குமாரையும், பாட்னா பைரட்ஸ் அணி நீரஜ் குமார், மோனுவையும், தெலுங்கு டைட்டன்ஸ் ராஜேஷ் கவுடாவையும், புனேரி பால்டன் அணி பாலாசாகிப் ஷகாஜி, பவன்குமாரையும் தக்க வைத்து இருக்கின்றன. தமிழ் தலைவாஸ் அணி சாகர், ஹிமான்ஷூ, எம்.அபிஷேக் ஆகிய 3 வீரர்களை தக்கவைத்துள்ளது. கேப்டன் அஜய் தாக்குர், ராகுல் சவுத்ரி, மொகித் சில்லார்ஆகிய நட்சத்திர வீரர்கள் உள்பட மொத்தம் 15 பேரை தமிழ் தலைவாஸ் அணி கழற்றிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story