நீரஜ் சோப்ராவின் சமூக வலைதள மதிப்பு ரூ.428 கோடியாக அதிகரிப்பு


நீரஜ் சோப்ராவின் சமூக வலைதள மதிப்பு ரூ.428 கோடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 Sep 2021 10:08 AM GMT (Updated: 19 Sep 2021 12:41 PM GMT)

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் சமூக வலைதளங்களின் மதிப்பு 428 கோடியாக அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர்,

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்து சரித்திர சாதனை நிகழ்த்தினார் நீரஜ் சோப்ரா. அதனை தொடர்ந்து பாராட்டு மழையில் நனைந்த அவருக்கு மாநில அரசுகள், விளையாட்டு அமைப்புகள் மற்றும் நிறுவனகங்களிடம் இருந்து பரிசுகளும் குவிந்தன.  

அந்த வகையில் சமூக வலைதளங்களிலும் நீரஜ் சோப்ராவுக்கு செல்வாக்கு அதிகரித்தது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது உலக அளவில் சமூக வலைதள பதிவுகளில் அதிகம் குறிப்பிடப்பட்ட வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

இந்த நிலையில் யூகோவ் ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் ஆய்வு முடிவுகளின்படி, சமூக வலைதளங்களில் செல்வாக்கு அதிகரிப்பதன் மூலம், நீரஜ் சோப்ராவின் சமூக வலைதள மதிப்பு 428 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 297 சதவீதம் அதிகரித்துள்ளது. 

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். சமூக வலைதளங்களில் அதிகமான பின்தொடர்வோரை வைத்திருப்போர் வணிக ரீதியில் வெளியிடும் விளம்பரங்களுக்கு, விளம்பரதாரர் தரப்பில் கட்டணம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய ஒரு விளம்பர பதிவுக்கு 3 கோடி ரூபாய் வரையில் வருவாயாக ஈட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story