டேவிஸ் கோப்பை டென்னிஸ் இந்தியா–கனடா அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்


டேவிஸ் கோப்பை டென்னிஸ் இந்தியா–கனடா அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 14 Sep 2017 9:31 PM GMT (Updated: 14 Sep 2017 9:31 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான உலக ‘பிளே–ஆப்’ சுற்றில் இந்தியா–கனடா அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடங்குகிறது.

எட்மண்டன்,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான உலக ‘பிளே–ஆப்’ சுற்றில் இந்தியா–கனடா அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடங்குகிறது.

உலக பிளே–ஆப் சுற்று

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக சுற்றுக்கான ‘பிளே–ஆப்’ போட்டியில் இந்தியா–கனடா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் கனடாவில் உள்ள எட்மண்டன் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 17–ந் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.

கனடா அணியில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 51–வது இடத்தில் இருப்பவரும், முன்னணி வீரர்களான ரபெல் நடால், டெல்போர்டோ, சோங்கா ஆகியோரை சமீபத்தில் வீழ்த்தி அசத்தியவருமான 18 வயது ‌ஷபோவாலோவ், 82–ம் நிலை வீரரான வாசெக் போஸ்பிசில் ஆகியோர் களம் இறங்குகிறார்கள். இரட்டையர் பிரிவில் டேனியல் நெஸ்டர், வாசெக் போஸ்பிசில் அல்லது பிராட்லீ ஸ்னூர் ஆகியோர் களம் காணுகிறார்கள்.

‌ஷபோவாலோவ்

இந்திய அணியில் உலக தர வரிசையில் 154–வது இடத்தில் இருக்கும் ராம்குமார், 157–வது இடத்தில் உள்ள யுகி பாம்ப்ரி ஆகியோர் ஒற்றையர் பிரிவிலும், ரோகன் போபண்ணா, சகெத் மைனெனி ஆகியோர் இரட்டையர் பிரிவிலும் மோத இருக்கின்றனர்.

இரு அணிகளிலும் இளைஞர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ‌ஷபோவாலோவ் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார் என்று தெரிகிறது. யுகி பாம்ப்ரி, ராம்குமார் ஆகியோர் சமீபத்தில் தர வரிசையில் உயர்வான நிலையில் இருக்கும் வீரர்களை வீழ்த்தி இருப்பதால் அவர்கள் இந்த சவாலை சமாளிப்பார்கள் என்று நம்பலாம்.

மிலோஸ் ராவ்னிக் ஆடவில்லை

வாசெக் போஸ்பிசில் நல்ல பார்மில் இல்லை. அதனால் அவர் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் எனலாம். யுகி பாம்ப்ரி 2014–ம் ஆண்டு சென்னை ஓபன் போட்டி கால்இறுதியில் வாசெக் போஸ்பிசில்லை சந்தித்தார். அதில் யுகி பாம்ப்ரி தோல்வி கண்டார். ராம்குமார் இதுவரை வாசெக் போஸ்பிசில்லை சந்தித்தது கிடையாது. உலக தர வரிசையில் 11–வது இடத்தில் இருப்பவரான மிலோஸ் ராவ்னிக் கனடா அணியில் இடம் பெறாதது இந்திய அணிக்கு அனுகூலமாகும்.

இந்திய அணி தொடர்ச்சியாக 4–வது முறையாக உலக சுற்றுக்கான ‘பிளே–ஆப்’ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக சுற்று போட்டிக்கு முன்னேறும். கடைசியாக 2011–ம் ஆண்டில் இந்திய அணி உலக சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது.


Next Story