இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கர்ப்பம்


இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கர்ப்பம்
x
தினத்தந்தி 23 April 2018 11:00 PM GMT (Updated: 23 April 2018 8:34 PM GMT)

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கர்ப்பம் அடைந்து இருக்கிறார்.

ஐதராபாத்,

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தி இருக்கும் சானியா மிர்சா இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். சாதனை நாயகியான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சர்ச்சைக்குரிய முறையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடினார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சானியா மிர்சா எந்தவிதமான போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் 31 வயதான சானியா மிர்சா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் நேற்று ஒரு செய்தியை சூசகமாக வெளியிட்டார். அதில் ‘பேபி மிர்சா மாலிக்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை அவரது கணவர் சோயிப் மாலிக்கும் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இதன் மூலம் இந்த ஜோடிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது என்பதை சூசகமாக உணர்த்தி இருக்கின்றனர். சானியா மிர்சாவின் சூசக பதிவு சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது. இந்த பதிவை பார்த்த சானியா மிர்சாவின் நண்பர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இது குறித்து சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சாவிடம் கருத்து கேட்ட போது, ‘சானியா மிர்சா கர்ப்பமாக இருப்பது உண்மை தான். அவருக்கு வருகிற அக்டோபர் மாதம் குழந்தை பிறக்கும்’ என்று தெரிவித்தார். கடந்த மாதம் சானியா மிர்சாவும், சோயிப் மாலிக்கும் அளித்த ஒரு பேட்டியில் தங்களுக்கு பெண் குழந்தை வேண்டும் என்று விரும்புவதாகவும், எந்த குழந்தையாக இருந்தாலும் அதற்கு ‘மிர்சா மாலிக்’ என்று பெயரிட வேண்டும் என்று சானியா மிர்சா விரும்புவதாக சோயிப் மாலிக் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் குணமடைந்து மீண்டும் களம் திரும்ப முடியும் என்று சானியா மிர்சா நம்பிக்கை தெரிவித்து இருந்தார். கர்ப்பம் அடைந்து இருப்பதன் மூலம் சானியா மிர்சாவின் டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

Next Story