பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் வாவ்ரிங்கா, அஸரென்கா தோல்வி


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் வாவ்ரிங்கா, அஸரென்கா தோல்வி
x
தினத்தந்தி 28 May 2018 10:45 PM GMT (Updated: 28 May 2018 9:52 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் வாவ்ரிங்கா, அஸரென்கா தோல்வியடைந்தனர்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 2-6, 6-3, 6-4, 6-7 (5-7), 3-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் குல்லெர்மோ கார்சியா லோபெஸ்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பன் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பிரேசிலை சேர்ந்த தகுதி சுற்று வீரர் ரோஜரியோ டுத்ரா சில்வாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் 6-2, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பெலாரஸ் வீரர் இல்வா இவாஷ்காவை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 7-6 (7-2), 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டானில்லா காலின்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 3-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பராகுவே வீராங்கனை வெரோனிசியாவை சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகா 6-2, 7-5 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் சோபியா கெனினை சாய்த்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 5-7, 5-7 என்ற நேர்செட்டில் செக்குடியரசு வீராங்கனை காதெரினா சினியாகோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.

Next Story