விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடக்கம்


விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 1 July 2018 10:45 PM GMT (Updated: 1 July 2018 9:26 PM GMT)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.

லண்டன்,

ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்), முன்னாள் சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா), மரின் சிலிச் (குரோஷியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), டொமினிக் திம் (ஆஸ்திரியா) ஆகிய முன்னணி வீரர்கள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. புல்தரையில் ஆடுவதில் கில்லாடியான 36 வயதான பெடரர் 9-வது முறையாக மகுடம் சூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவர் தனது முதல் சுற்றில் துசான் லாஜோவிச்சுடன் (செர்பியா) இன்று மோதுகிறார். நடால் தனது முதல் சவாலை, துடி சிலாவுடன் (இஸ்ரேல்) தொடங்குகிறார்.

ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் ஒரே இந்தியரான தரவரிசையில் 85-வது இடம் வகிக்கும் யுகி பாம்ப்ரி முதல் சுற்றில் இத்தாலியின் தாமஸ் பாபியானோவுடன் மோதுகிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி உள்பட 6 இந்தியர்கள் களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, காயத்தில் இருந்து மீண்டு வந்த ஒலிம்பிக் சாம்பியனும், இரண்டு முறை விம்பிள்டனை வென்றவருமான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), பிரான்ஸ் வீரர் பெனோய்ட் பேருடன் முதல் சுற்றில் விளையாடுவதாக இருந்தார். ஆனால் இன்னும் முழுமையான உடல்தகுதியை எட்டவில்லை என்று கூறி நேற்று போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அண்மையில் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றிய ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நடப்பு சாம்பியன் முகுருஜா (ஸ்பெயின்), வோஸ்னியாக்கி (ஆஸ்திரேலியா), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), மரிய ஷரபோவா (ரஷியா) உள்ளிட்டோர் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் ஓடுகிறார்கள். இவர்களுடன் குழந்தை பெற்றுக்கொண்டு மறுபிரவேசம் செய்துள்ள 7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்சும் (அமெரிக்கா) களத்தில் குதித்துள்ளார்.

முதல் சுற்றில் நெதர்லாந்தின் அரன்ட்சா ரஸ்சை எதிர்கொள்ளும் செரீனா, இங்கு பட்டத்தை வசப்படுத்தினால், பெண்கள் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 பட்டம்) சாதனையை சமன் செய்து விடுவார்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.307 கோடியாகும். இதில் ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.20¼ கோடியுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும்.

இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story