ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்


ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்
x
தினத்தந்தி 13 Aug 2018 3:07 AM GMT (Updated: 13 Aug 2018 3:07 AM GMT)

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். #RogersCup

டோராண்டோ,

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-6 (3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கரென் காச்சனோவை (ரஷியா) தோற்கடித்தார்.

மற்றொரு அரைஇறுதியில் 27-ம் நிலை வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), 6-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். 2 மணி 47 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சிட்சிபாஸ் 6-7 (4), 6-4, 7-6 (7) என்ற செட் கணக்கில் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியின் மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரில் டாப்-10 இடத்தில் உள்ள 4 வீரர்களை சாய்த்த இளம் வீரர் என்ற சிறப்பை சிட்சிபாஸ் பெற்றார். அவர் முந்தைய ரவுண்டுகளில் முன்னணி வீரர்கள் டொமினிக் திம், விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரை விரட்டியடித்தார்.

இந்நிலையில் ரோஜர்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் ரபெல் நடால், ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார். சுமார் ஒரு மணி 41 நிமிடங்கள் நீடித்த போட்டியில் ரபெல் நடால் 6-2, 7-6 (4) என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ரபெல் நடால் 4-வது முறையாக ரோஜர்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story