ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 6 வது தங்கத்தை பெற்று தந்தது போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி


ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 6 வது தங்கத்தை பெற்று தந்தது போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி
x
தினத்தந்தி 24 Aug 2018 7:14 AM GMT (Updated: 24 Aug 2018 7:14 AM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஆகியோர் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றனர். #AsianGames2018

ஜகார்த்தா,

45 நாடுகள் பங்கேற்றுள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய ஆடவர் டென்னிஸ் இரட்டையர் அணி, கஜகஸ்தான் அணியை  6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து இந்தியாவிற்கு 6-வது தங்கத்தை பெற்று கொடுத்தது.

அதுபோல், பெண்களுக்கான 10 மீ ஏர்பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஹீனா சித்து வெண்கலம் பதக்கம் வென்றார். இந்தியா தற்போது வரை 6 தங்கம், 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story