சர்வதேச டென்னிசில் 100-வது பட்டத்தை வென்றார், பெடரர்


சர்வதேச டென்னிசில் 100-வது பட்டத்தை வென்றார், பெடரர்
x
தினத்தந்தி 2 March 2019 11:15 PM GMT (Updated: 2 March 2019 8:13 PM GMT)

ரோஜர் பெடரர், சர்வதேச டென்னிஸ் போட்டியில் தனது 100-வது பட்டத்தை வென்றார்.

துபாய்,

ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது. இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 11-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமான பெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாசை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். அத்துடன் ஆஸ்திரேலிய ஓபனில் 4-வது சுற்றில் சிட்சிபாசிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டார். துபாய் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெடரர் வெல்வது இது 8-வது முறையாகும். வாகை சூடிய அவருக்கு ரூ.4 கோடியும், 2-வது இடத்தை பிடித்த சிட்சிபாசுக்கு ரூ.2 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

22 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் விளையாடி வரும் ரோஜர் பெடரருக்கு, ஒற்றையர் பிரிவில் இது 100-வது சர்வதேச பட்டமாக அமைந்தது. இதில் 20 கிராண்ட்ஸ்லாம் மகுடமும் அடங்கும். இதன் மூலம் ‘ஓபன் எரா’ வரலாற்றில் (அமெச்சூர் வீரர்களுடன் இணைந்து தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) இந்த மைல்கல்லை எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை 37 வயதான பெடரர் பெற்றார். இந்த வகையில் அமெரிக்க ஜாம்பவான் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடம் வகிக்கிறார்.


Next Story