அங்கிதா ரெய்னாவின் அறிவுரை


அங்கிதா ரெய்னாவின் அறிவுரை
x
தினத்தந்தி 4 May 2019 6:53 AM GMT (Updated: 4 May 2019 6:53 AM GMT)

இந்தியாவின் ‘நம்பர் 1’ டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா

‘நிதி விஷயத்தில் ஒழுங்காக இருப்பவர்கள், எல்லா விஷயங்களிலும் ஒழுங்காக இருப்பார்கள்’ என்றொரு கூற்று உண்டு. இது பிரபலங்களுக்கும் பொருந்தும்.

அந்தவகையில், இந்தியாவின் ‘நம்பர் 1’ டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவிடம், விளையாட்டு தவிர்த்த, நிதி சார்ந்த ஒரு சுறுசுறு ‘சுருக்’ பேட்டி...

நீங்கள் முதன்முதலில் பெற்ற பெரியதொகை காசோலை: 2009-ம் ஆண்டில் மும்பையில் ஐ.டி.எப். தொடரில் விளையாடியபிறகு எனக்கு வழங்கப்பட்ட காசோலை. அதை நான் அப்படியே என் அம்மாவிடம் கொடுத்துவிட்டேன்.

நீங்கள் இதுவரை வாங்கியதிலேயே மிகவும் விலை உயர்ந்த பொருள்: இனிமேல்தான் அப்படி ஒரு பொருளை வாங்க வேண்டும்.

விளையாட்டில் நீங்கள் ஈட்டும் பணத்தை யார் நிர்வகிக்கிறார்கள், எவற்றில் எல்லாம் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள்: நான் ஈட்டும் பணத்தை எங்கம்மாவும், எனது சகோதரனுமே நிர்வகிக்கிறார்கள். அவர்கள், பரஸ்பர நிதிகள், பிக்சட் டெபாசிட்கள் போன்றவற்றில் அப்பணத்தை முதலீடு செய்கிறார்கள்.

பண விஷயத்தில் நீங்கள் செய்த தவறு: இதுவரை எதுவுமில்லை.

அடுத்து நீங்கள் திட்டமிட்டிருக்கும் பெரிய செலவு: ஒரு கார் வாங்க எண்ணுகிறேன். சிறுவயது முதலே, வோக்ஸ்வேகன் பீட்டில் கார் வாங்க வேண்டும் என்பது என் கனவு. ஆனால் இப்போது அந்தக் கார் தயாரிக்கப்படுகிறதா என்றுகூட எனக்குத் தெரியாது.

பணம் தொடர்பாக நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்ல விரும்பும் அறிவுரை: நிறையச் சம்பாதியுங்கள், அதை புத்திசாலித்தனமாகச் செலவழியுங்கள். ஆனால் எப்போதும், பணம்தான் வாழ்வில் மிக முக்கியமான விஷயம் என்று எண்ணிச் செயல்படாதீர்கள்.


Next Story