மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ரபெல் நடால் அரைஇறுதிக்கு தகுதி


மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ரபெல் நடால் அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 11 May 2019 10:00 PM GMT (Updated: 11 May 2019 7:10 PM GMT)

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அரைஇறுதியில் ரபெல் நடால்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2–வது இடத்தில் உள்ள ரபெல் நடால் (ஸ்பெயின்), 7–வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவை சந்தித்தார். இதில் 5 முறை சாம்பியனான ரபெல் நடால் 6–1, 6–2 என்ற நேர்செட்டில் வாவ்ரிங்காவை எளிதில் தோற்கடித்து 11–வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9–வது இடத்தில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) 7–5, 3–6, 6–2 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனும், 4–வது இடத்தில் இருப்பவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

பெடரர் அதிர்ச்சி தோல்வி

இன்னொரு கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6–3, 6–7 (11–13), 4–6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5–வது இடத்தில் உள்ள டோமினிக் திம்மிடம் (ஆஸ்திரியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு களிமண் தரை போட்டிக்கு திரும்பிய பெடரர் ஏமாற்றத்துடன் நடையை கட்டினார். பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) மோதுகிறார்கள்.

பெடரரை வீழ்த்திய பிறகு டோமினிக் திம் அளித்த பேட்டியில், ‘களிமண் தரை போட்டியில் பெடரர் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறப்பு வாய்ந்த வீரர். அவருக்கு எதிராக ஒவ்வொரு புள்ளியை எடுப்பதும் மிகவும் கடினமாகவும், சவாலாகவும் இருந்தது’ என்று தெரிவித்தார்.


Next Story