விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்டர்சன், வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி


விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்டர்சன், வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 5 July 2019 11:33 PM GMT (Updated: 5 July 2019 11:33 PM GMT)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கெவின் ஆண்டர்சன், வோஸ்னியாக்கி ஆகியோர் 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீரரும், கடந்த ஆண்டு விம்பிள்டனில் இறுதி சுற்று வரை முன்னேறியவருமான தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள குடோ பெல்லா (அர்ஜென்டினா) 6-4, 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் விரட்டினார்.

நடப்பு சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா) தன்னை எதிர்த்த ஹர்காக்சை (போலந்து) 7-5, 6-7, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண்-பிரேசிலின் மார்செலோ டெமோலினர் ஜோடி 7-6 (7-1), 5-7, 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் சான்டெர் ஜிலே-ஜோரன் விலிஜென் இணையை வென்றது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 4-6, 2-6 என்ற நேர் செட்டில் ஷாங் சூவாயிடம் (சீனா) பணிந்தார். 50-ம் நிலை வீராங்கனையான ஷாங் சூவாய் விம்பிள்டனில் 4-வது சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-3, 6-1 என்ற நேர் செட்டில் விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) ஊதித்தள்ளினார். கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), ஸ்விடோலினா (உக்ரைன்) உள்ளிட்டோரும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.


Next Story