பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பிளிஸ்கோவா அரைஇறுதிக்கு முன்னேற்றம்


பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பிளிஸ்கோவா அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 1 Nov 2019 11:40 PM GMT (Updated: 1 Nov 2019 11:40 PM GMT)

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், பிளிஸ்கோவா அரைஇறுதிக்கு முன்னேறினார்.

ஷென்ஜென்,

49-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘ஊதா’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) நேற்று 7-5, 7-6 (12-10) என்ற செட் கணக்கில் மாற்று ஆட்டக்காரர் சோபியா கெனினை (அமெரிக்கா) வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 10 நிமிடங்கள் நீடித்தது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே வீராங்கனையான ஸ்விடோலினா அரைஇறுதியில் பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) இன்று சந்திக்கிறார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-0, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) போராடி சாய்த்தார். 2-வது வெற்றியை பெற்ற பிளிஸ்கோவா தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டினார். அரைஇறுதி சுற்றில் அவர் நம்பர் ஒன் மங்கை ஆஷ்லி பார்டியுடன் (ஆஸ்திரேலியா) மோதுகிறார். விம்பிள்டன் சாம்பியனான ஹாலெப் ஒரு வெற்றி, 2 தோல்வியோடு நடையை கட்டினார்.

Next Story