பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் - இந்திய வீரர்கள் ராம்குமார், நாகல் வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் - இந்திய வீரர்கள் ராம்குமார், நாகல் வெற்றி
x
தினத்தந்தி 29 Nov 2019 11:46 PM GMT (Updated: 29 Nov 2019 11:46 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ராம்குமார், சுமித் நாகல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

நூர் சுல்தான்,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நேற்று தொடங்கியது.

இதில் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார், அனுபவம் இல்லாத 17 வயதான பாகிஸ்தான் வீரர் முகமது சோகைப்பை சந்தித்தார். 42 நிமிடம் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் ராம்குமார் எதிராளிக்கு ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் முகமது சோகைப்பை பந்தாடினார்.

மற்றொரு ஆட்டத்தில் சுமித் நாகல் (இந்தியா), பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமானை எதிர்கொண்டார். 64 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் ஹூஜைய்பா அபதுல் ரகுமானை வீழ்த்தினார். டேவிஸ் கோப்பை போட்டியில் சுமித் நாகல் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

வெற்றிக்கு பிறகு சென்னையைச் சேர்ந்த ராம்குமார் அளித்த பேட்டியில், ‘எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். முதல் நாளில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை (இன்று) நடைபெறும் ஆட்டத்தில் ஜீவன்-லியாண்டர் அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அத்துடன் எங்கள் பணி முடிவுக்கு வரும். எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறினார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமான்-முகமது சோகைப் இணையை சந்திக்கிறது. மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல்-முகமது சோகைப், ராம்குமார்- ஹூஜைய்பா அப்துல் ரகுமான் ஆகியோர் மோதுகிறார்கள்.

Next Story