கிளாசிக் டென்னிஸ் போட்டி: 3 ஆண்டுக்கு பிறகு செரீனா ‘சாம்பியன்’


கிளாசிக் டென்னிஸ் போட்டி: 3 ஆண்டுக்கு பிறகு செரீனா ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 13 Jan 2020 12:44 AM GMT (Updated: 13 Jan 2020 12:44 AM GMT)

கிளாசிக் டென்னிஸ் போட்டியில், 3 ஆண்டுக்கு பிறகு செரீனா ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். மேலும் பரிசுத்தொகையை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாகவும் அறிவித்தார்.

ஆக்லாந்து,

கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர் கணக்கில் சக நாட்டவர் ஜெசிகா பெகுலாவை சாய்த்து கோப்பையை கைப்பற்றினார். மூன்று ஆண்டுக்கு பிறகு அவர் வென்ற முதல் பட்டம் இதுவாகும். மேலும் பெண் குழந்தைக்கு தாயான பிறகு அவரது முதல் மகுடமாகவும் இது அமைந்தது. ஒட்டுமொத்தத்தில் 38 வயதான செரீனா வில்லியம்ஸ் ருசித்த 73-வது பட்டமாகும். இதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியுடன் இணைந்து களம் இறங்கினார். இதில் செரீனா ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்- ஆசியா முகமது இணையிடம் தோல்வியை தழுவியது.

ஒற்றையர் வெற்றிக்கு பிறகு செரீனா கூறுகையில், ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு கோப்பையை வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியின் மூலம் கிடைத்த பரிசுத்தொகையை (ரூ.30 லட்சம்) ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். மேலும் இந்த போட்டியின் போது நான் அணிந்து விளையாடிய உடைகளை நலநிதி திரட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ள வழங்குகிறேன். ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடி வருகிறேன். அங்கு காட்டுத்தீயால் ஏற்பட்ட பாதிப்புகளை பற்றிய செய்திகளை பார்க்கும் போது வேதனையாக உள்ளது’ என்றார்.

Next Story