2 ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம்: வெற்றியுடன் தொடங்கினார், சானியா


2 ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம்: வெற்றியுடன் தொடங்கினார், சானியா
x
தினத்தந்தி 14 Jan 2020 11:41 PM GMT (Updated: 14 Jan 2020 11:41 PM GMT)

2 ஆண்டுக்கு பிறகு டென்னிஸ் களம் திரும்பிய இந்தியாவின் சானியா மிர்சா வெற்றியோடு தொடங்கி இருக்கிறார்.

ஹோபர்ட்,

மொத்தம் ரூ.1.94 கோடி பரிசுத்தொகையான ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.

அவர், உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து நேற்று இரட்டையர் முதலாவது சுற்றில் ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா)- மியூ கட்டோவை (ஜப்பான்) எதிர் கொண்டார். இரண்டு டபுள் பால்ட், தங்களது சர்வீசை தவற விட்டது என்று தடுமாற்றத்துடன் முதல் செட்டை பறிகொடுத்த சானியா ஜோடி அடுத்த செட்டை டைபிரேக்கர் வரை போராடி வசப்படுத்தியது. தொடர்ந்து சூப்பர் டைபிரேக்கரில் அருமையான ஷாட்டுகள் மூலம் எதிராளியை மடக்கினர்.

1 மணி 41 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் சானியா-கிச்செனோக் கூட்டணி 2-6, 7-6 (7-3), 10-3 என்ற செட் கணக்கில் கலாஷ்னிகோவா ஜோடியை தோற்கடித்தது. சானியா இணை அடுத்து கால்இறுதியில் அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியுடன் மோத உள்ளது.

வெற்றிக்கு பிறகு 33 வயதான சானியா மிர்சா தனது மகன் இஜானுடன் இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில், “இன்றைய தினம் எனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றாகும். நீண்ட காலத்திற்கு பிறகு களம் இறங்கியுள்ளேன். அதுவும் எனது முதல் ஆட்டத்தின் போது எனது பெற்றோர், குழந்தை உடன் இருந்த நிலையில் கிடைத்த வெற்றி பரவசமூட்டுகிறது. நீங்கள் (ரசிகர்கள்) என் மீது வைத்துள்ள அன்புக்கும், அளிக்கும் வரவேற்புக்கும் நன்றி கடன்பட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story