மராட்டிய ஓபன் டென்னிஸ் சென்னை வீரர் ராம்குமார் பங்கேற்பு
மராட்டிய ஓபன் டென்னிஸ் சென்னை வீரர் ராம்குமார் பங்கேற்க உள்ளார்.
மும்பை,
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் வருகிற 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரதான சுற்றில் விளையாட இந்திய வீரர் ராம்குமார் ராமநாதனுக்கு ‘வைல்டு கார்டு’ மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர்.
சென்னையை சேர்ந்த 25 வயதான ராம்குமார் தரவரிசையில் 185-வது இடத்தில் இருக்கிறார். ராம்குமாருக்கு ‘வைல்டு கார்டு’ வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் தரவரிசையில் 131-வது இடத்தில் இருக்கும் இந்திய இளம் வீரர் சுமித் நாகலுக்கு ஒற்றையர் பிரதான சுற்றில் நேரடியாக களம் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே தரவரிசையில் 123-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு நேரடியாக விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது நினைவிருக்கலாம். மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் இருவர் நேரடியாக விளையாட வாய்ப்பு பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.
Related Tags :
Next Story