டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் லியாண்டர் பெயஸ்


டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் லியாண்டர் பெயஸ்
x
தினத்தந்தி 6 Feb 2020 11:28 PM GMT (Updated: 6 Feb 2020 11:28 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் தகுதி சுற்றில் இந்திய அணி, குரோஷியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப் நகரில் அடுத்த மாதம் (மார்ச்) 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடக்கிறது.

புதுடெல்லி,

இந்த போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வெளியில் இருந்து அணியை வழிநடத்தும் விளையாடாத கேப்டனாக ரோகித் ராஜ்பால் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுடன் ஓய்வு பெறும் சீனியர் வீரர் லியாண்டர் பெயஸ் அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார். திருமணம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் விளையாடாத பிரஜ்னேஷ் குணேஸ்வரன் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதே போல் காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத ரோகன் போபண்ணா, திருமண வரவேற்பு நிகழ்ச்சியால் ஒதுங்கிய திவிஜ் சரண் ஆகியோரும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். ஒற்றையர் பிரிவில் ஆடும் இளம் வீரர்கள் சுமித் நாகல், ராம்குமார் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி வருமாறு:-

பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சுமித் நாகல், ராம்குமார், ரோகன் போபண்ணா, திவிஜ் சரண், லியாண்டர் பெயஸ், கேப்டன்: ரோகித் ராம்பால், மானேஜர்: ஜீஷன் அலி.

Next Story