விம்பிள்டன் டென்னிஸ் ரத்து: ரூ.1,066 கோடியை இழப்பீடு தொகையாக பெறுகிறது, இங்கிலாந்து கிளப்


விம்பிள்டன் டென்னிஸ் ரத்து: ரூ.1,066 கோடியை இழப்பீடு தொகையாக பெறுகிறது, இங்கிலாந்து கிளப்
x
தினத்தந்தி 10 April 2020 12:24 AM GMT (Updated: 10 April 2020 12:24 AM GMT)

விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டாலும், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 1,066 கோடி இழப்பீடு தொகையாக இந்த போட்டியை நடத்தக்கூடிய ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப்புக்கு கிடைக்க இருக்கிறது.

லண்டன், 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழம் பெருமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவதாக ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் கடந்த வாரம் அறிவித்தது. 2-வது உலகப் போர் காலக்கட்டத்துக்கு பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். 

விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டதன் மூலம் சுமார் ரூ.2,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் இந்த போட்டிக்கு காப்பீடு செய்து இருந்ததால் பெரிய வருவாய் இழப்பில் இருந்து ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் தப்பி இருக்கிறது. 2002-ம் ஆண்டில் சார்ஸ் வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப், தொற்றுநோய் உள்பட எந்தவிதமான இயற்கை இடர்பாடாலும் பாதிக்கப்பட்டு விம்பிள்டன் போட்டி நடத்த முடியாமல் போனால் அதற்கு இழப்பீடு பெறும் வகையில் காப்பீடு செய்துள்ளது. 

அதற்காக வருடந்தோறும் கிட்டத்தட்ட ரூ.15 கோடியை பிரிமீயம் தொகையாக செலுத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த 17 ஆண்டுகளில் மொத்தம் ரூ.258 கோடியை செலுத்தி இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டாலும், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 1,066 கோடி இழப்பீடு தொகையாக இந்த போட்டியை நடத்தக்கூடிய ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப்புக்கு கிடைக்க இருக்கிறது.

Next Story