‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும்’ - சானியா மிர்சா நம்பிக்கை


‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும்’ - சானியா மிர்சா நம்பிக்கை
x
தினத்தந்தி 18 April 2020 11:00 PM GMT (Updated: 18 April 2020 7:55 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தன்னால் பங்கேற்க முடியும் என்று சானியா மிர்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா ஆன்லைன் மூலம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

‘கொரோனா காரணமாக டென்னிஸ் உள்பட அனைத்து விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நீங்கள் மைதானத்துக்குள் நுழையும் போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரத்தை, வேறு எதனாலும் ஈடுசெய்ய முடியாது. ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எப்பொழுதும் சிறப்பானதாகும். அதேநேரத்தில் ரசிகர்கள் இன்றி தான் போட்டி நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டால், அது சிறந்ததா? என்பது எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் அனுமதியின்றி காலியாக இருக்கும் ஸ்டேடியத்தில் விளையாட தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. குழந்தை பெற்ற பிறகு டென்னிஸ் போட்டிக்கு திரும்புவதற்காக 2 வருடம் நான் கடினமாக உழைத்து இருக்கிறேன். இந்த ஆண்டு டோக்கியோவில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட நான் தயாராக இருந்தேன். அதற்கு தயாராக இல்லையெனில் நான் களம் திரும்பி இருக்க வேண்டிய அவசியமில்லையே?. சொல்லப்போனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போனது எனக்கு லேசான பின்னடைவு தான். ஏனெனில் அடுத்த ஆண்டு எனக்கு மேலும் ஒரு வயது அதிகரித்து விடும். இருப்பினும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் என்னால் விளையாட முடியும் என்று நம்புகிறேன்’ என்று அவர் கூறினார்.

Next Story