கொரோனாவினால் ரத்து செய்யப்பட்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருந்த வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்க முடிவு


கொரோனாவினால் ரத்து செய்யப்பட்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருந்த வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்க முடிவு
x
தினத்தந்தி 10 July 2020 11:26 PM GMT (Updated: 10 July 2020 11:26 PM GMT)

கொரோனாவினால் ரத்து செய்யப்பட்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருந்த வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

லண்டன், 

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் கடந்த ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடக்க இருந்தது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவியதை அடுத்து இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு விம்பிள்டன் டென்னிஸ் நடக்காமல் போனது இதுவே முதல்முறையாகும்.

விம்பிள்டன் போட்டியை நடத்தும் ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப், எல்லா வகையிலான பாதிப்புகளுக்கும் இழப்பீடு பெறும் வகையில் இன்சூரன்ஸ் செய்து இருப்பதுடன், வருடந்தோறும் பாலிசி தொகையை தவறாமல் செலுத்தி வந்ததால் போட்டி ரத்தானாலும், போட்டி அமைப்பாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக பெரும் தொகையை அளித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக தற்போது வீரர், வீராங்கனைகள் பொருளாதார ரீதியாக பாதிப்பை சந்தித்து இருப்பதால் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக விம்பிள்டன் போட்டியின் பிரதான சுற்று மற்றும் தகுதி சுற்றில் விளையாட தரவரிசை அடிப்படையில் தகுதி படைத்த 620 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.95 கோடியை ஊக்கப் பரிசாக பகிர்ந்து அளிக்க இந்த போட்டியின் அமைப்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதன்படி ஒற்றையர் பிரிவில் தகுதி சுற்றில் விளையாட தகுதி படைத்த 224 பேருக்கு தலா ரூ.12 லட்சமும், பிரதான சுற்றில் விளையாடக்கூடிய 256 பேருக்கு தலா ரூ.24 லட்சமும், இரட்டையர் பிரிவில் விளையாட தகுதி படைத்தவர்களுக்கு தலா ரூ.6 லட்சமும், சக்கர நாற்காலி (வீல்சேர்) வீரர்களுக்கு தலா ரூ.5¾ லட்சமும், சிறப்பு சக்கர நாற்காலி வீரர்களுக்கு தலா ரூ.4¾ லட்சமும் வழங்கப்படுகிறது.

Next Story