பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் நடால், வாவ்ரிங்கா கால்இறுதிக்கு முன்னேற்றம்


பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் நடால், வாவ்ரிங்கா கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 6 Nov 2020 10:15 PM GMT (Updated: 7 Nov 2020 12:07 AM GMT)

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் நடால், வாவ்ரிங்கா கால்இறுதிக்கு முன்னேறினார்.

பாரீஸ், 

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-1, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்சனை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 33 நிமிடமே தேவைப்பட்டது. கால்இறுதியில் நடால், சக நாட்டு வீரர் பாப்லோ கார்ரெனோ பஸ்டாவை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா சரிவில் இருந்து மீண்டு வந்து 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் 8-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்னொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (13-11), 6-7 (7-9), 6-4 என்ற செட் கணக்கில் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அட்ரியன் மன்னரினோவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்குள் கால் பதித்தார். கால்இறுதியில் வாவ்ரிங்கா-அலெக்சாண்டர் ஸ்வெரேவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினா வீரர் ஸ்வாட்ஸ்மேன் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் டேவிடோவிச் போகினாவை விரட்டியடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். அவர் கால்இறுதியில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவை சந்திக்கிறார். இந்த போட்டியில் ஸ்வாட்ஸ்மேன் வெற்றி பெற்றால் உலக டூர் இறுதி சுற்று போட்டிக்கு தகுதி பெறுவார்.

Next Story