டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நாளை தொடக்கம்


டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 13 Nov 2020 11:00 PM GMT (Updated: 13 Nov 2020 11:00 PM GMT)

முன்னணி 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது.

லண்டன், 

ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த போட்டியில் தரவரிசையில் டாப்-8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. இறுதி சுற்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டி முதல்முறையாக 1970-ம் ஆண்டு டோக்கியோவில் அரங்கேறியது. தற்போது லண்டனில் நடப்பது 50-வது ஆண்டு கொண்டாட்டமாகும். இதை மையப்படுத்தி இரண்டு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி ‘டோக்கியோ 1970’ என்ற பெயரிலான குரூப்பில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), டேனில் மெட்விடேவ் (ரஷியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டியாகோ ஸ்வாட்ஸ்மேன் (ஜெர்மனி) ஆகியோரும், ‘லண்டன் 2020’ என்ற பிரிவில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்க ஓபன் சாம்பியனான டொமினிக் திம் (ஆஸ்திரியா), நடப்பு சாம்பியன் சிட்சிபாஸ் (கிரீஸ்), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘ரவுண்ட்-ராபின்’ முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். அனைவரும் முன்னணி வீரர்கள் என்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும். ஆனால் கொரோனா அபாயத்தால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

இந்த சீசனில் 42 ஆட்டங்களில் 39-ல் வெற்றி கண்டுள்ள ஜோகோவிச் ஏற்கனவே இந்த பட்டத்தை 5 முறை வென்றிருக்கிறார். இந்த தடவையும் வாகை சூடினால், இந்த பட்டத்தை அதிக முறை ருசித்தவரான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரின் (6 முறை) சாதனையை சமன் செய்து விடுவார்.

சமீபத்தில் 13-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி வரலாறு படைத்த 34 வயதான ரபெல் நடாலுக்கு ஏனோ ஏ.டி.பி. இறுதிசுற்று கோப்பை மட்டும் இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் தொடர்ந்து 16-வது ஆண்டாக கால்பதிக்கும் நடால் இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறார். அந்த கசப்பான அனுபவத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் காத்திருக்கிறார். 3-ம் நிலை வீரர் டொமினிக் திம், 4-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் ஆகியோரும் கடும் குடைச்சல் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கொரோனா பாதிப்பால் பரிசுத்தொகை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஏறக்குறைய 37 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது. போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.42½ கோடியாகும். இதில் போட்டி கட்டணம் ரூ. 1¼ கோடி, லீக் சுற்று வெற்றிக்கு ரூ.1¼ கோடி வீதம் கிடைக்கும். தோல்வியையே சந்திக்காமல் ஒரு வீரர் மகுடத்தை உச்சிமுகர்ந்தால் மொத்தம் ரூ.11½ கோடியை பரிசாக பெறுவார். ஒற்றையர் பிரிவு வீரர்களை போல் இரட்டையர் பிரிவிலும் டாப்-8 ஜோடிகள் களம் காண உள்ளன. இந்த போட்டி லண்டனில் தொடர்ந்து 12-வது ஆண்டாக நடக்கிறது. ஆனால் லண்டனில் நடக்க இருப்பது இதுவே கடைசியாகும். அடுத்த ஆண்டு இந்த போட்டி இத்தாலியின் துரின் நகருக்கு மாற்றப்படுகிறது.

Next Story