கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் - சானியா மிர்சா


கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் - சானியா மிர்சா
x
தினத்தந்தி 19 Jan 2021 11:22 PM GMT (Updated: 19 Jan 2021 11:22 PM GMT)

கொரோனா பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக, இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது குணமடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாகத் தனது டுவிட்டர் பதிவில், “இந்த ஆண்டு துவக்கத்தில் நான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டேன். கடவுளின் ஆசீர்வாதத்தால் தற்போது அதிலிருந்து மீண்டு ஆரோக்கியமாக உள்ளேன். ஆனால் எனது அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

வைரசின் பாதிப்புகள் அறிகுறிகள் பெரிய அளவில் இல்லாதது உண்மையில் எனது அதிர்ஷ்டம் தான். ஆனால் நான் தனிமைப்படுத்தப்பட்டு எனது இரண்டு வயதுக் குழந்தை மற்றும் குடும்பத்தை விட்டு தனிமையிலிருந்தது மிகப்பெரிய வேதனையாக இருந்தது.

அதனால் தான் அனைவரையும் மாஸ்க் மற்றும் அடிக்கடி கைகளைக் கழுவவும் அறிவுறுத்தி வருகிறேன். இந்த வைரஸ் ஒன்றும் காமெடி அல்ல. நான் அதிகபட்சமான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் இருந்தேன். அப்படியிருந்தும் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டேன். நமது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பாதுகாக்க இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டியது நமது கடமையாகும். ஒன்றாக இணைந்து இந்த வைரசுக்கு எதிராகப் போராட வேண்டும்.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினரின் நிலை நினைத்தால் எனக்கு உண்மையில் பயமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது புதுப்புது அறிகுறிகளும் நிலையில்லா தன்மையும் இந்த வைரசை மிகவும் வலிமையானதாக மாற்றுகிறது. மேலும் நமது உடல் நிலையைப் பலவீனப்படுத்துவதுடன் மனதளவிலும் இந்த வைரஸ் நம்மை மிகவும் சோதிக்கிறது” என்று அதில் தெரிவித்துள்ளார். 



Next Story