மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடால், ஆஷ்லி பார்ட்டி வெற்றி


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடால், ஆஷ்லி பார்ட்டி வெற்றி
x
தினத்தந்தி 7 May 2021 1:37 AM GMT (Updated: 7 May 2021 1:37 AM GMT)

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.

 களிமண்தரை போட்டியான இதில் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் பாலா படோசாவை (ஸ்பெயின்) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் கடந்த மாதம் சார்லஸ்டோன் டென்னிசில் படோசாவிடம் அடைந்த தோல்விக்கு பார்ட்டி பழிதீர்த்துக் கொண்டார். களிமண் தரை போட்டியில் ஆஷ்லி பார்ட்டி தொடர்ச்சியாக பெற்ற 16-வது வெற்றி இதுவாகும்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 7-6 (9-7), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) வென்று கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் அலெக்சி பாப்ரியனை (ஆஸ்திரேலியா) விரட்டியடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அதே சமயம் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 4-6, 7-6 (7-2), 1-6 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியன் கேரினிடம் (சிலி) அதிர்ச்சிகரமாக தோற்று ெவளியேறினார். இந்த ஆட்டம் 2 மணி 29 நிமிடங்கள் நீடித்தது. இதன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ராபர்ட் பாரா- செபாஸ்டியன் கபால் (கொலம்பியா) இணையை சாய்த்து கால்இறுதியை எட்டியது.


Next Story