டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடப்பது சந்தேகம் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா சொல்கிறார்


டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடப்பது சந்தேகம்  டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா சொல்கிறார்
x
தினத்தந்தி 11 May 2021 10:35 PM GMT (Updated: 11 May 2021 10:35 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடப்பது சந்தேகம் என்று டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா சொல்கிறார்.

ரோம்,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் திருவிழா ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடத்த முழுவீச்சில் ஏற்பாடு நடந்து வருகிறது. இதில் 200 நாடுகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் இந்த போட்டி நடப்பது சந்தேகம் தான் என்று அந்த நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா கூறியுள்ளார். 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான 23 வயதான நவோமி ஒசாகா நேற்று அளித்த பேட்டியில், ‘உண்மையை கூற வேண்டும் என்றால் தற்போதைய நிலைமையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஒரு விளையாட்டு வீராங்கனையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே விருப்பமாகும். ஆனால் ஒரு மனிதராக, நாம் இப்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இருக்கிறோம் என்று தான் சொல்வேன். மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் இல்லாத போது, போட்டி பாதுகாப்பானதாக இல்லை என்று உணரும் பட்சத்தில் நிச்சயம் ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கல் தான்’ என்றார்.

Next Story