சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர்- ரூப்லெவ்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர்- ரூப்லெவ்
x

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷியாவின் ரூப்லெவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 5-வது இடம் வகிப்பவரும், ஒலிம்பிக் சாம்பியனுமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), 3-ம் நிலை வீரர் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார். திரிலிங்கான இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்டுகளை இருவரும் தலா ஒன்று வீதம் கைப்பற்றிய நிலையில் கடைசி செட்டில் அனல் பறந்தது.

இதில் 1-4 என்று பின்தங்கிய அலெக்சாண்டர் வயிற்று பிரச்சினையாலும் அவதிப்பட்டார். ஆடுகளத்தை விட்டு வெளியே சென்று வாந்தி எடுத்த அவர் மாத்திரை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடி சரிவில் இருந்து மீண்டதுடன் டைபிரேக்கர் வரை போராடி இந்த செட்டை வசப்படுத்தி வெற்றிக்கனியையும் பறித்தார். 2 மணி 41 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 3-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

சிட்சிபாஸ் கிளப்பிய சர்ச்சை

முதல் செட்டின் போது சிட்சிபாஸ், ‘பாத்ரூம் பிரேக்’ என்ற பெயரில் 8 நிமிடம் மைதானத்தை விட்டு வெளியேறி ஓய்வறைக்கு சென்று விட்டு வந்தார். ஓய்வறையில் அவர் தனது பயிற்சியாளருடன் ஆட்டம் யுக்தி தொடர்பாக போன் மூலம் விவாதித்து இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியது.

போட்டி முடிந்த பிறகு இதை மறுத்த சிட்சிபாஸ், ‘வியர்வால் உடல்முழுவதும் நனைந்து விட்டது. இதனால் பனியனை மாற்றவே விதிமுறைப்படி ஓய்வு கேட்டு சென்றேன். அனைவர் முன்னிலையில் மைதானத்திலேயே உடையை மாற்றுவதை அசவுகரியமாக உணர்ந்தேன். மற்றபடி இதில் எந்த விவகாரமும் கிடையாது’ என்றார்.

அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கூறுகையில், ‘போட்டியின் போது நான் தேவையின்றி ஒரு போதும் பாத்ரூம் சென்றது கிடையாது. சிலர் பாத்ரூம் ஓய்வு விதியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிட்சிபாசின் செயல் ஏமாற்றம் அளிக்கிறது. பிரெஞ்ச் ஓபனின் போதும் அவர் இவ்வாறு தான் நடந்து கொண்டார்’ என்றார்.

மெட்விடேவ் வெளியேற்றம்

மற்றொரு அரைஇறுதியில் 2-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெட்விடேவ், சக நாட்டவரான 7-ம் நிலை வீரர் ஆந்த்ரே ரூப்லெவை எதிர்கொண்டார். 2 மணி 22 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் ரூப்லெவ் 2-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் மெட்விடேவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மெட்விடேவை, ரூப்லெவ் தோற்கடித்து இருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அவருடன் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று இருந்தார்.

2-வது செட்டில் மெட்விடேவ் பந்தை திருப்பி அடிக்க வேகமாக ஓடிய போது, பின்பகுதியில் படம் பிடித்துக் கொண்டிருந்த டி.வி. கேமரா மீது முழங்கையால் ஓங்கி இடித்து விட்டார். கீழே சரிந்த கேமராவை, கேமராமேன் சரி செய்த போது, வேண்டுமென்றே லென்சில் மிதித்தார். பிறகு, கேமரா மீது மோதியதில் கிட்டத்தட்ட தனது கையே உடைந்து போயிருக்கும் என்று நடுவரிடம் புகார் கூறினார்.

மிரட்டும் டீச்மான்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் பிரதான சுற்றை எட்டியவரான 76-ம் நிலை மங்கை ஜில் டீச்மானின் (சுவிட்சர்லாந்து) ஆதிக்கம் நீள்கிறது. 2-ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகா, ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் ஆகியோரை வெளியேற்றிய டீச்மான், அரைஇறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவுக்கும் (செக்குடியரசு) ‘செக்‌’ வைத்தார். இந்த ஆட்டத்தில் 24 வயதான டீச்மான் 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய இறுதிப்போட்டி இதுவாகும்.

இன்னொரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமும், விம்பிள்டன் சாம்பியனுமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-2, 7-5 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை விரட்டினார். நடப்பு தொடரில் எந்த ஒரு செட்டையும் இழக்காத ஆஷ்லி பார்ட்டி, இந்த சீசனில் 6-வது முறையாக இறுதிசுற்றை எட்டியிருக்கிறார். மகுடத்துக்கான ஆட்டத்தில் அவர் டீச்மானை எதிர்கொள்கிறார்.

Next Story