பாராஒலிம்பிக் போட்டி: டேபிள் டென்னிசில் இந்திய வீராங்கனை பவினா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


பாராஒலிம்பிக் போட்டி: டேபிள் டென்னிசில் இந்திய வீராங்கனை  பவினா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 26 Aug 2021 7:51 PM GMT (Updated: 26 Aug 2021 7:51 PM GMT)

பாராஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிசில் இந்திய வீராங்கனை பவினா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ, 

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல், இங்கிலாந்தின் மேகன் ஷாக்கில்டோனை சந்தித்தார். வீல்சேரில் அமர்ந்தபடி அருமையாக ஆடிய பவினா பட்டேல் 11-7, 9-11, 17-15, 13-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். தனது பிரிவில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடத்தை பிடித்த அவர் 2-வது சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறியுள்ளார். இன்று காலை நடக்கும் 2-வது சுற்றில் பிரேசிலின் ஜாய்ஸ் டி ஆலிவெராவை அவர் சந்திக்கிறார். இதில் வெற்றிபெறும் வீராங்கனை கால்இறுதியில் நடப்பு சாம்பியன் ரன்கோவிச் பெரிச்சை (செர்பியா) சந்திக்க வேண்டியது வரும். மற்றொரு ஆட்டத்தில் (டி பிரிவு) இந்திய வீராங்கனை சோனால்பென் மனுபாய் பட்டேல் 12-10, 5-11, 3-11, 9-11 என்ற செட் கணக்கில் லீ மி குயூவிடம் (தென்கொரியா) தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

இதற்கிடையே, நீச்சலில் இன்று நடக்கும் 200 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் இந்திய வீரர் சுயாஸ் ஜாதவ் பங்கேற்கமாட்டார் என்று இந்திய குழுவினருக்கான தலைவர் குர்ஷரன் சிங் தெரிவித்துள்ளார். சளி மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்ட சுயாஸ் ஜாதவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வந்தாலும் அவரை ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் 200 மீட்டர் மெட்லே பிரிவை தவற விடும் சுயாஸ் ஜாதவ் 100 மீட்டர் பிரஸ்டிரோக், 50 மீட்டர் பட்டர்பிளை ஆகிய பிரிவுகளில் நீந்துவார்.

Next Story