டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பின்லாந்து ஆட்டம் இன்று தொடக்கம்


டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பின்லாந்து ஆட்டம் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 16 Sep 2021 7:13 PM GMT (Updated: 16 Sep 2021 7:13 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பின்லாந்து ஆட்டம் இன்று தொடங்குகிறது.

எஸ்போ,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக ‘குரூப்1’ பிரிவில் இந்தியா-பின்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் பின்லாந்து நாட்டில் உள்ள எஸ்போ நகரில் இன்றும் (வெள்ளிகிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவு முதலாவது ஆட்டத்தில் உலக தரவரிசையில் 165-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரரான சென்னையை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 419-ம் நிலை வீரரான பின்லாந்தின் ஒட்டோ விர்டானெனை சந்திக்கிறார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசையில் 187-வது இடத்தில் உள்ள இந்திய வீரரான சென்னையை சேர்ந்த ராம்குமார், 74-ம் நிலை வீரரான எமில் ரூசுவோரியுடன் (பின்லாந்து) மல்லுக்கட்டுகிறார்.

நாளை நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்னா-திவிஜ் சரண் ஜோடி, பின்லாந்தின் ஹாரி ஹெலிவாரா-ஹென்றி கோன்டினென் இணையை எதிர்கொள்கிறது. மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்-எமில் ரூசுவோரி, ராம்குமார்-ஒட்டோ விர்டானென் ஆகியோர் மோதுகிறார்கள்.

இந்த போட்டியில் வெற்றி காணும் அணி அடுத்த ஆண்டு (2022) நடைபெறும் டேவிஸ் கோப்பை போட்டியின் இறுதி சுற்றுக்கான தகுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெறும்.

Next Story