இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, பிரனாய் 2-வது சுற்றுக்கு தகுதி


இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, பிரனாய் 2-வது சுற்றுக்கு தகுதி
x

இந்திய ஓபன் பேட்மிண்டனில் சாய்னா, பிரனாய் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில், கடந்த ஆண்டில் காயம் காரணமாக பல போட்டிகளில் ஆடாத முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், செக்குடியரசின் தெரசா வாபிகோவாவை சந்தித்தார். 

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சாய்னா 22-20, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது முதுகுவலி பிரச்சினை காரணமாக வாபிகோவா பாதியிலேயே விலகினார். இதனால் சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் சாய்னா சக நாட்டு வீராங்கனை மால்விகா பான்சோத்தை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 21-14, 21-7 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பாப்லோ அபியனை விரட்டியடித்து 2-வது சுற்றை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 21-15, 21-7 என்ற நேர்செட்டில் எகிப்தின் ஆதம் ஹாதிம் எல்காமாலை வெளியேற்றினார். அதே சமயம் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21-19, 7-21, 14-21 என்ற செட் கணக்கில் அயர்லாந்தின் நாத் நுயெனிடம் போராடி வீழ்ந்தார்.

Next Story