ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்...!


ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்...!
x
தினத்தந்தி 15 Sep 2022 1:59 PM GMT (Updated: 15 Sep 2022 2:32 PM GMT)

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். முன்னாள் நம்பர் ஒன் வீரரான பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதில் 8 விம்பிள்டன் மகுடமும் அடங்கும். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர்.

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவீஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் விளையாடி உள்ள ரோஜர் பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அடுத்த வாரம் நடைபெறவுள்ள லேவர் கோப்பை அவரது இறுதி போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

ரோஜர் கடந்து வந்த பாதை....

* சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் (1981) பிறந்தார். இவரது தாய் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர். குழந்தைப் பருவம் முதலே டென்னி ஸில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிப் பருவத்தில் தீவிர டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டார்.

* தொழில்முறை ஆட்டக்காரராக 1998-ல் களம் இறங்கியவர், அடுத்த ஆண்டில் உலகத் தரவரிசையில் 100-வது இடம் பிடித்தார். மிலன் உள்விளையாட்டு அரங்கப் போட்டிகளில் முதல்முறையாக தனிநபர் கோப்பையை வென்றார். 2003-ல் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை விம்பிள்டனில் வென்றார்.

* ஒரே ஆண்டில் (2004) மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். 2006, 2007-ம் ஆண்டுகளிலும் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதை 302 வாரங்கள் தக்கவைத்துக்கொண்டார் 2008 ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார்.

* ஒற்றையர் ஆண்கள் பிரிவில் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் ஏற்கெனவே 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பீட் சாம்ப்ராஸின் சாதனையை முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியா, பிரெஞ்ச், விம்பிள்டன், அமெரிக்கா ஆகிய 4 இடங்களிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 7 ஆண் வீரர்களில் ஒருவர் இவர்.

* ஆண்கள் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாமில் 27 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை. தொடர்ந்து 23 முறை அரையிறுதிக்கு முன்னேறினார்.

* தொடர்ந்து 65 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றது, காலிறுதிக்கு 48 முறை முன்னேறியது, பெரும்பாலான போட்டிகளில் வென்றது (307), தொழில்முறையில் 88 டென்னிஸ் டைட்டில்கள் போன்ற சாதனைகள் இவரை டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக உயர்த்தின.

* டென்னிஸ் உலகத் தரவரிசையில் தற்போது 3-வது இடத்தில் இருக்கிறார். ரசிகர்களால் 'பெட் எக்ஸ்பிரஸ்', 'சுவிஸ் மேஸ்ட்ரோ' என்று புகழப்படுகிறார். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, பின்தங்கிய மக்களின் கல்வி, விளையாட்டுக்கு உதவுகிறார். சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் பெற்றவர்.

* 'தாய்' நாடான தென் ஆப்பிரிக்காவில் குழந்தைகள் சிறந்த கல்வி, விளையாட்டு, சுகாதாரம் பெற ஆப்பிரிக்கா - சுவிஸ் சாரிட்டி என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க ஓபன் போட்டியில் தான் பயன்படுத்திய டென்னிஸ் ராக்கெட்களை ஏலம்விட்டு, அதில் கிடைத்த தொகையை, கத்ரினா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கினார்.

* சுனாமி பேரழிவின்போது தமிழகம் வந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, பல உதவிகளைச் செய்தார். யுனிசெஃப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார். எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கூட்டங்களில் பங்கேற்றார். பிரபல வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியை நடத்தி, ஹைதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார்.


Next Story