பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்


பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 2 March 2022 9:12 PM GMT (Updated: 2 March 2022 9:12 PM GMT)

இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை தொடங்குகிறது. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

மவுன்ட் மாங்கானு,

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி 1973-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2017-ம் ஆண்டு சொந்த நாட்டில் நடந்த உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை அரங்கேறுகிறது.

இந்த போட்டியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும், லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். மொத்தம் 31 போட்டிகள் மவுன்ட் மாங்கானு, டுனெடின், ஹாமில்டன், வெலிங்டன், ஆக்லாந்து, கிறைஸ்ட்சர்ச் ஆகிய 6 நகரங்களில் நடக்கிறது.

லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் 2 புள்ளிகள் வழங்கப்படும். ஆட்டம் டையில் (சமனில்) முடிந்தால் ‘சூப்பர் ஓவர்’ முறை கடைபிடிக்கப்படமாட்டாது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டியில் ‘டை’ ஏற்பட்டால் மட்டும் ‘சூப்பர் ஓவர்’ அடிப்படையில் முடிவு காணப்படும்.

ஆஸ்திரேலியா ஆதிக்கம் தொடருமா?

கோப்பையை வெல்லும் ‘ரேசில்’ ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் முன்னிலையில் வரிந்து கட்டுகின்றன. அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணியான ஆஸ்திரேலியா தனது ஆதிக்கத்தை தொடர தீவிர முனைப்பு காட்டும். மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியா, கடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு தொடர்ச்சியாக 26 ஒருநாள் போட்டியில் வெற்றி வாகை சூடி சாதனை படைத்ததுடன் பலமிக்க அணியாக திகழ்கிறது. நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் எப்போதும் சிறப்பாக செயல்படும். 2000-ம் ஆண்டு உள்ளூரில் உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. தற்போது மறுபடியும் உள்நாட்டில் சாதிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அந்த அணி சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 322 ரன் இலக்கை எளிதாக எட்டிப்பிடித்து அசத்தியது. நடப்பு சாம்பியன் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்தும் சவால் அளிக்கக்கூடிய அணியாக கணிக்கப்பட்டுள்ளது.

இதே போல் இந்திய அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. 2005, 2017-ம் ஆண்டுகளில் 2-வது இடம் பிடித்த இந்திய அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் ஆயத்தமாகி வருகிறது. தனது கடைசி உலக கோப்பை போட்டியில் விளையாட இருக்கும் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கோப்பையுடன் விடைபெறும் வேட்கையில் உள்ளார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்திய அணி அபாயகரமானது என்பதில் சந்தேகமில்லை. ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை குவித்து உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கு கடந்த ஆண்டில் முற்றுப்புள்ளி வைத்த இந்தியா, பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை புரட்டியெடுத்தது. இதன் மூலம் இந்திய அணியின் நம்பிக்கை நிச்சயம் அதிகரித்து இருக்கும்.

ரூ.26½ கோடி பரிசு

கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டியின் தொடக்ககட்ட ஆட்டங்களை நேரில் காண 10 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு சூழ்நிலையை பொறுத்து ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.26½ கோடியாகும். சாம்பியன் கோப்பையை வெல்லும் அணி ரூ.10 கோடி பரிசாக அள்ளும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.4½ கோடி கிடைக்கும்.

உலக கோப்பை போட்டியில் தொடக்க நாளான நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story