கிரெம்லின் கோப்பை டென்னிஸ் :எம்மா ராடுகனு விலகல்
வரும் 18 ஆம் தேதி மாஸ்கோவில் தொடங்க இருந்த கிரெம்லின் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து எம்மா ராடுகனு விலகியுள்ளார்.
மாஸ்கோ
இந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று பிரபலமானவர் எம்மா ராடுகனு.18 வயதே ஆன எம்மா ராடுகனு கனடாவில் பிறந்தவர் .ஆனால் சிறு வயது முதலே பிரிட்டன் நாட்டிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார்.
தகுதி சுற்றின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்ற இவர் அந்த தொடரில் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டியில் பட்டம் வென்றார்.
இந்த நிலையில் வரும் 18 ஆம் தேதி மாஸ்கோவில் தொடங்க இருந்த கிரெம்லின் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
துரதிருஷ்டவசமாக எனது போட்டி அட்டவணையில் நான் சில மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளது.இந்த ஆண்டு மாஸ்கோவில் நடைபெறும் கிரெம்லின் கோப்பை தொடரில் நான் பங்கேற்கமாட்டேன். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் தொடரில் ரஷ்ய ரசிகர்கள் முன் விளையாடுவேன் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலே எம்மா ராடுகனு தோல்வி அடைந்து வெளியேறிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story