நடிகைகள் படுக்க சம்மதிக்கிறார்களா? பெண் நடன இயக்குனருக்கு நடிகை ஸ்ரீரெட்டி கண்டனம்
பிரபல பெண் நடன இயக்குனருக்கு நடிகை ஸ்ரீரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை பலரும் கண்டித்து வரும் நிலையில் பிரபல இந்திப்பட நடன இயக்குனர் சரோஜ்கான் நடிகைகள் சம்மதத்துடன்தான் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “படுக்கைக்கு அழைப்பது என்பது புதிய விஷயம் இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கை என்பது இந்தி பட உலகில் நூற்றாண்டை கடந்து நடந்து வருகிறது. இந்தி பட உலகில் நடிகைகள் ஒப்புதலுடன்தான் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் வாழ்க்கை மேம்படுகிறது. இந்தி பட உலகில் பெண்களை படுக்கையில் பயன்படுத்தினாலும் அவர்களை அப்படியே விட்டு விடாமல் வேலை கொடுக்கிறார்கள். தவறானவர்கள் பிடியில் சிக்க கூடாது என்று ஒரு பெண் விரும்பினால் அவளுக்கு அத்தகைய நிலைகள் ஏற்படாது. திறமை இருக்கும் பெண் ஏன் அவளை விற்க வேண்டும்?” என்றார்.
சரோஜ்கான் கருத்துக்கு பட உலகில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அவரை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிடுகின்றனர். தெலுங்கு பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டியும் சரோஜ்கானை கண்டித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “சரோஜ்கான் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவர் வெளியிட்ட கருத்தின் மூலம் இழந்து விட்டார். திரையுலகில் மூத்த கலைஞராக இருக்கும் சரோஜ்கான் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்து வழிநடத்த வேண்டும். அதை விடுத்து இப்படி படுக்கைக்கு அழைப்பது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம் என்றும் அது தவறு அல்ல என்றும் கூறியிருப்பது வருத்தம் அளிக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு செக்ஸ் அடிமைகளாக இருக்க நடிகைகள் யாரும் விரும்புவது இல்லை.” என்றார்.