படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சர்ச்சை குறித்து அடா சர்மா கருத்து தெரிவித்து உள்ளார்.

Update: 2018-04-26 23:00 GMT
பிரபுதேவா ஜோடியாக சார்லி சாப்ளின் 2-ம் பாகத்தில் நடிக்கிறார் அடா சர்மா. இவர் தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

அடா சர்மா கூறியதாவது:-

“பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா என்பதால் அதை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறார்கள். பாலியல் தொல்லைகள் வீட்டில் இருக்கும் உறவினர்களிடம் இருந்து தொடங்குகிறது. இதற்கு சம்மதிப்பதும், எதிர்ப்பதும் அவரவர் சொந்த முடிவு.

வக்கிரபுத்தி உள்ளவர்கள் பெண்களை அழைக்கத்தான் செய்வார்கள். அதற்கு உடன்படக்கூடாது என்று முடிவு எடுத்தால் யாரும் நெருங்க முடியாது. பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது கொடூரமானது. என்னை படுக்கைக்கு அழைத்த சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எந்த நடிகையானாலும் திறமை இருந்தால் யாருக்கும் பணிய அவசியம் இல்லை.

என்னை வார்த்தைகளால் யாரேனும் துன்புறுத்தினால் கண்டுகொள்ள மாட்டேன். நடிகையான பிறகு விமர்சனங்களை தாங்கிக்கொள்ள வேண்டும். இது ஜனநாயக நாடு. தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த அவரவர்க்கு சுதந்திரம் இருக்கிறது. ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம். நடிகைகளை யார் கேவலமாக பேசினாலும் ஆதரிக்க மாட்டேன்.

அலுவலகங்களில் மட்டுமின்றி பஸ், ரெயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனது பாதுகாப்புக்கு தனியாக ஆட்களை நியமித்து உள்ளேன். பெற்றோர்கள் பெண் குழந்தைகளை, “அநாவசியமாக வெளியே சுற்றக்கூடாது. நேரத்துக்கு வீட்டுக்கு வந்து விட வேண்டும்” என்றெல்லாம் புத்திமதி சொல்லி வளர்க்கிறார்கள். அதுபோல் தங்கள் மகன்களுக்கும் பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்து வளர்த்தால் பாலியல் வன்மங்களே ஏற்படாது”.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்