முன்னாள் மனைவியுடன் சேரும் ஹிருத்திக் ரோஷன்?

விவாகரத்து செய்த முன்னாள் மனைவியுடன் ஹிருத்திக் ரோஷன் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-05-04 23:15 GMT

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், சூசனும் 2000-ல் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக நகர்ந்த ஹிருத்திக்கின் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி சூசன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன் பிறகு விவாகரத்து கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். ஹிருத்திக் ரோஷன் சமரசம் செய்தும் பலன் இல்லை. இதனால் இருவருக்கும் கோர்ட்டு 2014-ல் விவாகரத்து வழங்கியது. அப்போது குழந்தைகளை சூசன் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.

பின்னர் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையில் சிக்கினார் ஹிருத்திக். தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கங்கனா ரணாவத் சாடினார். அதனை ஹிருத்திக் ரோஷன் மறுத்தார். ஒருவருக்கொருவர் வக்கீல் நோட்டீசும் அனுப்பினார்கள். தற்போது அந்த பரபரப்பு அடங்கியுள்ளது. இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷனும் சூசனும் மீண்டும் நெருக்கமாகி உள்ளனர்.

இருவரும் குழந்தைகளுடன் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. ‘அவெஞ்சர்’ ஹாலிவுட் படம் பார்க்க சூசனையும், குழந்தைகளையும் ஹிருத்திக் ரோஷன் அழைத்துச் சென்றார். சமீபத்தில் சூசன் வீட்டில் நடந்த தனது மகன் ரிதான் பிறந்த நாள் விருந்துக்கும் சென்று இருந்தார். ஹிருத்திக் ரோஷனும், சூசனும் பழைய கோபத்தை மறந்து மீண்டும் காதல் வயப்பட்டு இருப்பதாகவும், சேர்ந்து வாழ்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.

மேலும் செய்திகள்