ஜனாதிபதியிடம் விருது பெறமுடியாதது ஏமாற்றம் - நடிகை பார்வதி

ஜனாதிபதியிடம் விருது பெறமுடியாதது ஏமாற்றம் அளிப்பதாக நடிகை பார்வதி கூறினார்.

Update: 2018-05-04 23:30 GMT

டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா சர்ச்சையில் முடிந்தது. 12 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்கினார். மற்றவர்கள் மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இராணி, ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் ஆகியோரிடம் இருந்து விருதுகளை பெற்றனர். இது விருது பெற வந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் 70-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள பார்வதி ‘டேக் ஆப்’ என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். டெல்லி சென்று இருந்த பார்வதிக்கும் இது ஏமாற்றத்தை அளித்தது.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஜனாதிபதி கையால் தேசிய விருது பெறுவது கவுரவமானது. மகிழ்ச்சி அளிக்க கூடியது. முதல் முறையாக விருது பெறுபவர்கள் மிகவும் ஆவலுடன் வந்து இருந்தார்கள். ஆனால் ஜனாதிபதி அனைவருக்கும் தனது கையால் விருது வழங்காதது ஏமாற்றத்தை அளித்தது” என்றார்.

மேலும் செய்திகள்