இது எங்க கோட்டை.. கிளம்பு, கிளம்பு ரஜினி அரசியலுக்கு அனல் கிளப்பும் ‘காலா பாடல்கள்’

ரஜினிகாந்த் படங்களில் பஞ்ச் வசனங்களும் பாடல் வரிகளும் ரசிகர்களை கொண்டாட வைக்கும்.

Update: 2018-05-10 00:00 GMT
கெட்ட பய சார் இந்த காளி, இது எப்படி இருக்கு, நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, என் வழி தனி வழி, நான் சொல்றதை செய்வேன் சொல்லாததையும் செய்வேன். நான் எப்ப வருவேன். எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன். பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல. பண்ணிங்கதான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளா வரும் என்றெல்லாம் பேசி தெறிக்க விட்டு இருந்தார்.

கபாலி படத்தில் வரும் ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் நெருங்கினா பொசுக்கிற கூட்டம்’ பாடல் பொறி கிளப்பி இருந்தது.

விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியல் பிரவேசத்துக்கு தயாராகும் நிலையில் இருக்கும் ரஜினியின் காலா பட பாடல்களும் சந்தோஷ் நாராயணன் இசையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று காலை யுடியூப்பில் வெளியானது.

பாடல் வரிகளில் அரசியல் நெடி இருந்தது. செம்ம வெயிட்டு, கண்ணம்மா, கற்றவை பற்றவை, தங்க செல, உரிமை மீட்போம், தெருவிளக்கு, போராடுவோம், நிக்கல் நிக்கல், கண்ணம்மா அக்கபெலா என்று 9 பாடல்கள் இருந்தன. ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தின.

போராடுவோம் பாடலில் ‘காணிக்கை என்ற பெயரில் கல் சிலைக்கு லஞ்சம் கோடி, கோடி குமியுது உண்டியலில், நாட்டில் ஆனால் பஞ்சம். நிறத்தாலும் மதத்தாலும் பிரிந்து விட்டோம். மனிதாபிமானத்தை மறந்து விட்டோம். உரிமை இழந்து விட்டோம். ஏழை உயிர் என்றாலே அலட்சியம். பணம்தான் நோயின் மருத்துவம். மருத்துவமனையில் அரசியல், நிலம் நீர் எங்கள் உரிமை. போராடுவோம். எங்கள் வறுமை ஒழிய போராடுவோம். புது புரட்சி உருவாக போராடுவோம்’ என்று அனல் கக்கும் வரிகள் இருந்தன.

உரிமை மீட்போம் பாடல் நிலத்தை மீட்க போராடும் மக்களை பற்றி இருந்தது. ‘கதவில்லாத கூட்டில் கனவுகள் ஏராளம், உண்டு, அடக்கும் காலம் இல்லை. நமக்கு வேலி இல்லை என்ற வரிகள் கவர்ந்தன. ஒத்தையில நிக்கிற வேங்க தில் இருந்தா மொத்தமா வாங்கடா என்ற வரிகளும் பாடலில் இருந்தது. இது எங்க கோட்டை. உள்ள வந்தால் வேட்டை. விசில் ஒண்ணு அடிச்சா கிளம்பும் பேட்டை. கிளம்பு கிளம்பு எங்க ஏரியா கிளம்பு கிளம்பு என்ற அதிரடி வரிகளும் தெருவிளக்கு வெளிச்சத்தில படித்து வாழ்வில் முன்னேறுவோம்.

மாடி மேல மாடி இல்லாட்டியும் ஒண்ணா இருப்போம். தெருக்கோடியில் பொழப்பு. நம்பி வாழ்வு. நாங்க சாதி பார்க்கும் சாதி இல்ல’ என்றெல்லாம் அடிமட்ட மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வரிகளும் இருந்தன. இரண்டு காதல் மெலடி பாடல்களும் உள்ளன.

காலா பாடல்கள் சமூக வலைத்தள ‘டிரெண்டிங்’கில் நேற்று முன்னிலையில் இருந்தது. 

மேலும் செய்திகள்