சினிமா தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

பையனூரில் அரசு ஒதுக்கிய நிலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.

Update: 2018-05-15 23:30 GMT
சென்னை,

திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

திரைப்பட தொழிலாளர்களுக்கு (பெப்சி) சென்னையை அடுத்த பையனூரில் அரசு 65 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இதில் 15 ஏக்கரில் புதிதாக ஸ்டூடியோ கட்டப்பட்டு உள்ளது. ரூ.6 கோடி செலவில் இந்தியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக இது கட்டப்பட்டு இருக் கிறது. ஒரே நேரத்தில் 6 படங்களின் படப்பிடிப்புகளை இங்கே நடத்த முடியும்.

இந்த ஸ்டூடியோவுக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த ஸ்டூடியோவை ஜூலை மாதம் திறந்து வைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

அங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக 6 ஏக்கரில் 640 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியையும் முதல்-அமைச்சர் தொடங்கிவைக்கிறார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தை, பெப்சியில் அடகு வைத்துவிட்டது போல பாரதிராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சிக்கும் நல்லுறவு நிலவுகிறது.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.

மேலும் செய்திகள்