தமன்னாவின் ஏக்கம்

தமிழ், தெலுங்கு படங்களில் தமன்னா நடித்து வருகிறார்.

Update: 2018-05-20 23:00 GMT

தமன்னா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகியும் மார்க்கெட் சரியவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாகவே இருக்கிறார். பாகுபலிக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடுகிறார். இந்தியில் வசூல் அள்ளிய குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்துக்கொண்டிருக்கும் அவர் சினிமா வாழ்க்கை பற்றி கூறியதாவது:-

“நான் சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டேன். 25 வயதில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தேன். எனது எல்லா படங்களுமே நல்ல வசூல் பார்த்துள்ளன. எனக்கும் பெயர் வாங்கி கொடுத்தன. 36 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். கதாநாயகிகளாக கொஞ்ச காலம்தான் நீடிக்க முடியும். அதன்பிறகு அக்காள், அண்ணி வேடங்களுக்கு இறக்கி விடுவார்கள். நான் இன்னும் 4, 5 வருடங்களுக்குள் 100 படங்களில் கதாநாயகியாக நடித்து விட வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த நம்பிக்கை இருக்கிறது.

சினிமாவில் 15 ஆண்டுகள் கதாநாயகியாக நான் நீடிப்பதற்கு காரணம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம்தான். குறைகளை சொல்லும்போது வருத்தப்படாமல் ஏற்றுக்கொண்டு என்னை திருத்தி இருக்கிறேன். விமர்சனங்கள்தான் என்னை வளர்த்து இருக்கிறது. நிறைய பேருக்கு விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மன நிலை இருப்பது இல்லை. இதனால் அவர்கள் பக்கம் உள்ள பலவீனத்தை அறிய முடியாமல் போகும். எனக்கு இப்போது நல்ல நேரம் நடக்கிறது. சிறந்த கதைகள், கதாபாத்திரங்கள் அமைகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்