வரதட்சணை கொடுமை கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய நடிகை

பிரபல இந்தி நடிகை பாபி டார்லிங். பஞ்சாப் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

Update: 2018-05-21 23:00 GMT
பிரபல இந்தி நடிகை பாபி டார்லிங். பஞ்சாப் மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் போபாலை சேர்ந்த ரோடு காண்டிராக்டர் ராம்னீக் என்பவருக்கும் 2016-ல் திருமணம் நடந்தது. சில மாதங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய இவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பாபி டார்லிங்கை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் ராம்னீக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். தன்னை ஜாமீனில் விடும்படி கோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய காரணம் குறித்து நடிகை பாபி டார்லிங் கூறியதாவது:-

“வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்றுதான் ராம்னீக்கை திருமணம் செய்தேன். ஆனால் அவர் நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை. தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அதிக வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்தார். ரத்த காயம் ஏற்படும்வரை அடித்தார். வலியால் நான் அழுதாலும் விடுவது இல்லை.

என் நடத்தையிலும் சந்தேகப்பட்டு மோசமாக பேசினார். இதனால் அவருடன் வாழ முடியாது என்று வந்து விட்டேன். அவருடன் இருந்திருந்தால் என்னை கொலை செய்து இயற்கையாக இறந்ததாக நாடகம் ஆடி இருப்பார். நான் சம்பாதித்து வாங்கிய சொத்துக்களையும் அபகரித்துக்கொண்டார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்