தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தை கண்டித்து சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம் இயக்குனர் பா.ரஞ்சித் பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவம் எங்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது. ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்காக ஓட்டு போட்ட மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இனிமேல் எதிர்காலத்தில் எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காக காவல்துறையால் நடத்தப்பட்டுள்ளது.
இதற்காக காவல்துறை மத்திய–மாநில அரசுகளை கண்டித்து 26–ந்தேதி (நாளை) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தமிழ் கலை, இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இதற்காக போலீஸ் அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளோம். தமிழ் உணர்வுள்ளவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.