என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்” -நடிகர் கார்த்தி

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்” -நடிகர் கார்த்தி

Update: 2018-05-27 00:33 GMT
‘பருத்தி வீரன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான கார்த்தி, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துடன், இதுவரை 15 படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். 2 படங்களில் கவுரவ வேடத்தில் வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளராக இருக்கும் இவர், நடிகர்களுக்கு சமூக பொறுப்பு இருக்கிறது என்ற கொள்கையில் உடன்பாடு கொண்டவர்.

அதன்படி தனது படங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகளோ, வசனங்களோ இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். நேற்று அவருக்கு பிறந்தநாள். இந்த பிறந்தநாளை அவர் கொண்டாடவில்லை. அதோடு தனது ரசிகர்களுக்கு அவர் நேற்று ஒரு அன்பு கட்டளையிட்டார். தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, 13 பேர்களின் உயிர்கள் பலியான நிலையில், தமிழகமே துக்கத்தில் இருக்கும்போது, எனக்காக பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இது ஒரு துக்க சம்பவம் ஆகும்.”

இவ்வாறு தனது அறிக்கையில் கார்த்தி கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்