சினிமாவில் 40 ஆண்டுகள் நீடித்து சாதனை: மூத்த நடிகர்களை பாராட்டிய அனுஷ்கா

சினிமாவில் 40 ஆண்டுகள் நீடித்து சாதனை படைத்த மூத்த நடிகர்களை அனுஷ்கா பாராட்டியுள்ளார்.

Update: 2018-05-29 23:15 GMT

அனுஷ்கா 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். இன்னும் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. பொருத்தமான வேடத்தில் நடிக்க கதை கேட்கிறார். இத்தனை காலம் படங்களில் நடிப்பதற்கு ரசிகர்கள்தான் காரணம் என்றார் அவர். இதுகுறித்து அனுஷ்கா கூறியதாவது:-

“நடிகர்கள்-நடிகைகள் சினிமாவில் நடிக்கலாம். திறமையை வெளிப்படுத்தலாம். ஆனால் ரசிகர்கள் ஆதரவு இருந்தால்தான் நடிப்புக்கு மரியாதை கிடைக்கும். அவர்களுக்கு பிடிக்காவிட்டால் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை. எனக்கு ரசிகர்கள் ஆதரவு நிறையவே இருக்கிறது. அருந்ததி, பாகுபலி, பாகமதி படங்களுக்கு பிறகு திறைமையான நடிகை என்று என்னை கொண்டாடினார்கள்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க தகுதியானவளாகவும் என்னை பார்த்தனர். அதனால்தான் எனக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து வந்து இருக்கிறது. முந்தைய காலத்தில் 30, 40 ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து நடித்தவர்களை நினைக்கும்போது பெருமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இப்போதுள்ள வசதிகள் அந்த காலத்து நடிகர்களுக்கு இல்லை.

மிகவும் கஷ்டப்பட்டுத்தான் திறமையை நிரூபித்து நிலைத்து இருந்துள்ளனர். அவர்களுடன் ஒப்பிடும்போது நானோ இப்போதுள்ள மற்ற நடிகர்-நடிகைகளோ சாதாரணமானவர்கள். நாங்கள் படுகிற கஷ்டமும் குறைவுதான். இப்போது ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தால் போதுமானது.” இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

மேலும் செய்திகள்