`அம்மன் தாயி' படத்தில் இரட்டை வேடங்களில் `பிக் பாஸ்' ஜூலி

`அம்மன் தாயி' படத்தில், பிக்பாஸ் புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார்.

Update: 2018-05-31 22:15 GMT
அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி' என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்' புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை டைரக்டும் செய்கிறார்கள், மகேஸ்வரன்-சந்திரஹாசன்.

`அம்மன் தாயி' படத்தை பற்றி டைரக்டர்கள் மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆகிய இருவரும் கூறியதாவது:-

``அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார்? என்பதே கதை. கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாறியில் இருந்து அம்மன் எப்படி வருகிறார்? என்பதை படத்தில் ஒரு முக்கிய காட்சியாக வைத்து இருக்கிறோம்.

படத்தின் கதாநாயகி ஜூலி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், முதலில் இந்த படத்தில் நடிக்க தயங்கினார். ``நான் அம்மன் வேடத்துக்கு பொருந்துவேனா?'' என்று யோசித்தார். அம்மன் வேடத்தில் அவரை போட்டோ எடுத்து காட்டியபோது, ஆச்சரியப்பட்டார். அவர் அம்மன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவீதம் பொருந்தியிருந்தார். இந்து பெண்ணாகவே மாறி, விரதம் இருந்து படத்தில் நடித்தார். வில்லனை, அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வதம் செய்யும் உச்சக்கட்ட காட்சியில் நடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தார்.

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டெரிக்-கார்த்திக்-ராஜ் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் 30 நாட்கள் படப் பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஆந்திர மாநிலம் பைரவக்கோனா என்ற இடத்தில், சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளோம். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.'' 

மேலும் செய்திகள்