குடும்ப உறவுகளுக்கு மதிப்பு கொடுங்கள் -காஜல் அகர்வால்

குடும்ப உறவுகளுக்கு மதிப்பு கொடுங்கள் என காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Update: 2018-06-01 23:00 GMT

இந்தியில் வெளியாகி வசூல் குவித்த குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். கடந்த வருடம் இவர் நடிப்பில் விவேகம், மெர்சல் படங்கள் வந்தன. இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். குடும்ப உறவுகள் மீது பற்று உள்ளவர் காஜல் அகர்வால்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“பணம் போனால் சம்பாதிக்கலாம். வேலை போனாலும் திரும்ப கிடைக்கும். ஆனால் குடும்ப உறவுகளை ஒரு தடவை இழந்தால் மீண்டும் சம்பாதிக்க முடியாது. நிஜ வாழ்க்கையில் நான் உணர்வுப்பூர்வமான பெண். உறவுகளின் மதிப்பு எனக்கு தெரியும். குடும்பத்தினரை எப்படி அனுசரித்து செல்ல வேண்டும். அவர்களுக்கு எப்படி மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ளேன்.

குடும்பத்தினருக்காக நான் எதையும் செய்வேன். என் சினிமா வாழ்க்கையை விட வேண்டும் என்றாலும் அதற்கும் தயார். இன்றைய தலைமுறையினர் வேகமாக வாழ்க்கையை நகர்த்துகின்றனர். குடும்ப உறவுகள் மகத்துவம் பற்றி அவர்களுக்கு தெரிந்து இருந்தாலும் சிறுசிறு விஷயங்களுக்காக பிரிந்து விடுகிறார்கள்.

அதற்கான காரணத்தை பற்றி ஆராய கூட அவர்கள் தயாராக இல்லை. எதற்காக குடும்பத்தை பிரிந்தோம் என்று அவர்கள் யோசிக்க ஆரம்பித்தால் இந்த சிறு விஷயத்துக்காகவா விலகினோம் என்று உணர்ந்து மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். பணம் அந்தஸ்தை விட மனிதர்கள் முக்கியம். அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

மேலும் செய்திகள்